திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.45 திருவொற்றியூர்
பண் - கொல்லி
வெள்ளத்தைச் சடையில் வைத்த
    வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின்
    மெய்தரு ஞானத் தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார்
    காய்த்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும்
    ஒற்றியூ ருடைய கோவே.
1
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
    வானவர் இறைவன் நின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை
    யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனும் அருந்த வத்தால்
    ஆன்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்
    ஒற்றியூ ருடைய கோவே.
2
தானத்தைச் செய்து வாழ்வான்
    சலத்துளே அழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில்
    வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி
    நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும்
    ஒற்றியூ ருடைய கோவே.
3
காமத்துள் அழுந்தி நின்று
    கண்டரால் ஒறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி
    நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையி ராவும்
    ஏகாந்தம் இயம்பு வார்க்கு
ஓமத்துள் ஒளிய தாகும்
    ஒற்றியூ ருடைய கோவே.
4
சமையமே லாறு மாகித்
    தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த
    இனிதினங் கிருந்த ஈசன்
கமையினை யுடைய ராகிக்
    கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகம் போலும்
    ஒற்றியூ ருடைய கோவே.
5
ஒருத்திதன் றலைச்சென் றாளைக்
    கரந்திட்டான் உலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி
    மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்
    உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்லன்
    ஒற்றியூ ருடைய கோவே.
6
பிணமுடை உடலுக் காகப்
    பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா
    போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளால்
    நினைக்குமா நினைக்கின் றார்க்கு
உணர்வினோ டிருப்பர் போலும்
    ஒற்றியூ ருடைய கோவே.
7
பின்னுவார் சடையான் தன்னைப்
    பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுள்
    தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி
    மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவார் உள்ளத் துள்ளார்
    ஒற்றியூ ருடைய கோவே.
8
முள்குவார் போகம் வேண்டின்
    முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றங்
    கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப்
    பாடியு மாடி நின்று
உள்குவார் உள்ளத் துள்ளார்
    ஒற்றியூ ருடைய கோவே.
9
வெறுத்துகப் புலன்க ளைந்தும்
    வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வச் செற்றக்
    குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தேர்
    உடையானை அடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தார்
    ஒற்றியூ ருடைய கோவே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.46 திருவொற்றியூர்
ஓம்பினேன் கூட்டை வாளா
    உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக்
    கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப்
    பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்
    ஒற்றியூ ருடைய கோவே.
1
மனமெனுந் தோணி பற்றி
    மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
    செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி
    மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்
    ஒற்றியூ ருடைய கோவே.
2
இப்பதிகத்தில் மூன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்
செற்றுக் களிற்றுரி கொள்கின்ற
    ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலும்
    இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி
    போலச் சுடரீமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
    லொற்றி யூரனுக்கே.
1
சொல்லக் கருதிய தொன்றுண்டு
    கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென்
    கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங்
    கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி
    யூருறை யுத்தமனே.
2
பரவை வருதிரை நீர்க்கங்கை
    பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை
    இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க
    மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி
    யூருறை யுத்தமனே.
3
தானகங் காடரங் காக
    வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை
    யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி
    யூருறை வாரவர்தாந்
தானக மேவந்து போனகம்
    வேண்டி உழிதர்வரே.
4
வேலைக் கடல்நஞ்ச முண்டவெள்
    ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட
    மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற்
    கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப்
    போதுந் தொழுமின்களே.
5
புற்றினில் வாழும் அரவுக்குந்
    திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு
    கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
    யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை
    யான்றன் விரிசடையே.
6
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு
    மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட்
    பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை
    யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி
    யூருறை உத்தமனே.
7
சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
    காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங்
    கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
    கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
    தில்லிடம் வேதியனே.
8
சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்
    சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன
    செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு
    நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன
    செய்யுமித் தீவினையே.
9
அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
    புறவம் முறவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக்
    களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்
    புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி
    யூரர் திருமுடியே.
10
தருக்கின வாளரக் கன்முடி
    பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப்
    பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்
    கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கின வாறென்செய் கேனொற்றி
    யூருறை பண்டங்கனே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com